மூலிகையின் பெயர் -: புங்கமரம்
தாவரப்பெயர் -: PONGAMIA PINNATA.
தாவரக்குடும்பம் -: PAPILIONACEAE.
வேறுபெயர்கள் -: கரஞ்சம், கரஞ்சகம், புங்கு (புன்கு) பூந்தி,
பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, விதைகள், வேர் மற்றும் எண்ணெய்.
அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? (பொன்னியின் செல்வன், கல்கி)
புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும் (ஐங்குறுநூறு 117 )
உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்னபெரும்போ தவிழ்ந்த கருந்தாட் புன்னை(நற்றிணை-231)
புங்கின்விதை காற்கிரந்த புண்கரப்பான் காதெழுச்சி
அங்கசன்ன கண்ணோய்க்கும் ஆம்பேதி-யுங்கட்கும்
காட்டுப்புங் கின்விதைக்கு கண்டதே மற்சொறிமேய்ப்
பூட்டுப்பங் கின்வாய்வும் போம் (அகத்தியர் குணபாடம்)
புங்கையின் சிறப்பம்சங்கள்
இந்த மரமானது, காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்துக் கொடுக்கும் தன்மை கொண்டதால், மண்ணை வளப்படுத்தும். கடினமான கால் சூழ்நிலைகளை (அதிக மழை மற்றும் வறட்சி) தாங்கி வளரக்கூடியது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்கை மரம்தான். வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.
எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை.
புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை இது அடர்த்தியான கிளைவேர்களைக் கொண்டதால், மண் அரிப்பை தடுக்கிறது.
சிறகமைப்புக் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும். நன்றாக முற்றியவுடன் லேசான மஞ்சள் நிறமுடைய காய்களின் முனை வளைந்து காணப்படும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
புங்கன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது. புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம். புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும். புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும். புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.
இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.கஷாயம் பெரி-பெரி நோயை குணப்படுத்தும். புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும். இந்த பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.
நீரிழிவை குணமாக்கும் மலர்கள்
மலர்கள் நீரிரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம். புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.
பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.
புண்களை ஆற்றும் விதைகள்
விதைகளின் பொடி கக்குவான் இருமலுக்கு நல்லது.
எண்ணெய் அஜீரணத்துடன் கூடிய ஜுரத்தை குணப்படுத்தும். தோல் நோய்களுக்கு புறப்பூச்சு மருந்தாகப் பயன்படும். புழுவைத்த புண்களை ஆற்றும். புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும். வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும், பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும். புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும். புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.
பயோடீசலாகும் விதை
புங்கன் எண்ணெயிலிருந்து தற்பொழுது பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிரிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
புங்கை எண்ணெயின் குணாதிசயங்கள்
பொதுவாக, புங்கை கொட்டையிலிருந்து, உண்ணத்தகாத எண்ணெய் எடுக்கப்படுகிறது. இக்கொட்டையில், 95% பருப்பு அடங்கியிருக்கும். எண்ணெய் அளவு, 27- 40% காணப்படும் எண்ணெய் பிழிவதற்கு, இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் போது, கொட்டையின் பருப்பிலிருந்து, 24 - 26.5 % வரை எண்ணெய் அளவு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு சுத்திகரிக்கப்படாத எண்ணெய், பழுப்பு மஞ்சலிலிருந்து காப்பி நிறத்தை கொண்டிருக்கும். இது கசப்பு சுவை, நுகரமுடியாத வாசனை மற்றும் உண்ண இயலாததாக இருக்கும்.
தாவர எரி பொருள் தவிர்த்து, இந்த எண்ணெயை, விளக்கு எரிய வைப்பதற்கு, உயவு எண்ணெய், வர்ணத்தை நீருடன் ஒட்டச் செய்வதற்கும் மற்றும் பூச்சி கொல்லி, சோப்பு உற்பத்தி, தோல் பதனீட்டு தொழிற்சாலைகளிலும் பயன் படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயை, முடக்குவாதம் மற்றும் தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதன் புண்ணாக்கில், அதிக தழைச்சத்து இருப்பதால், மண்வளத்தை உயர்த்த, இதை பயன்படுத்தலாம். இந்த புண்ணாக்கை நிலத்தில் பயன் படுத்துவதன்மூலம், நுர்புழுவிலிருந்து செடிகளை காப்பாற்றலாம்.
No comments:
Post a Comment